உள்ளூர் செய்திகள்

மும்பையை சேர்ந்த பள்ளி சிறுமியை மதுரைக்கு கடத்தி வந்த வாலிபர்

Published On 2023-09-06 10:30 GMT   |   Update On 2023-09-06 10:30 GMT
  • மாணிக்கத்தை கைது செய்து மதுரையிலிருந்து விமானம் மூலம் மும்பை கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
  • முறையான ஆவணங்கள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் பயணம் செய்ய அனுமதி மறுத்தனர்.

மதுரை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தானே மாவட்டம் வெர்சோவா பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

அங்கு இட்லி கடை வைத்து தொழில் செய்து வரும் இவரது கடையில் உறவினரான மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள வாழவந்தான் புரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் மாணிக்கம் (வயது 30) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே கடந்த 6-ந்தேதி பாக்கியராஜின் மகள் வீரலட்சுமி (16) பள்ளிக்குச் சென்றிருந்தார். அவரை யாருக்கும் தெரியாமல் மாணிக்கம் மதுரைக்கு அழைத்து வந்து விட்டார். பல்வேறு இடங்களில் பாக்கியராஜ் தனது மகளைத் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் அதே நேரத்தில் மாணிக்கமும் மாயமாகி இருந்தததால் சந்தேகத்தின் பேரில் தானே வெர்சோவா காவல் நிலையத்தில் பாக்கியராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள வாழவந்தான் கிராமத்தில் பதுங்கியிருந்த மாணிக்கம் மற்றும் வீரலட்சுமி ஆகியோரை கண்டுபிடித்தனர்.

மாணிக்கத்தை கைது செய்து மதுரையிலிருந்து விமானம் மூலம் மும்பை கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் முறையான ஆவணங்கள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் பயணம் செய்ய அனுமதி மறுத்தனர்.

இதனை தொடர்ந்து அதிகாரியிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் மாணிக்கம் கைது செய்யப்பட்டதற்கான சான்று மற்றும் பாக்கியராஜ் அளித்த புகார் மனு ஆகியவை கொண்டு அனுமதி வழங்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சிறுமியை கடத்தி தப்பி வந்த மாணிக்கத்தால் மதுரை விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் அனுமதி சான்று அளித்தவுடன் மும்பை போலீசார் பாக்யராஜ், வீரலட்சுமி மற்றும் சிறுமியை கடத்திய குற்றவாளி மாணிக்கம் ஆகியோர் மும்பைக்கு விமான மூலம் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News