உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் அருகே 8 டன் அரிசி சிக்கியது- 2 பேர் கைது

Published On 2023-07-02 12:15 GMT   |   Update On 2023-07-02 12:15 GMT
  • போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
  • பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னை மண்டல பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா உத்தரவுப்படி, காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் மற்றும் காஞ்சிபுரம் சிறப்பு தாசில்தார் இந்துமதி ஆகியோர் இணைந்து காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்காக காஞ்சிபுரம் - வேலூர் சாலை கீழம்பி என்ற இடத்தில் 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

போலீசார் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை ஸ்ரீபெரும்புதூர் நுகர் பொருள் வழங்கல் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

இது சம்பந்தமாக தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே நின்றுகொண்டு இருந்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த முரளி (31), கரண் (24) ஆகியோரை இன்ஸ்பெக்டர் சசிகலா கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News