உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே தொழிலாளி வெட்டிக்கொலை- உறவினருக்கு வலைவீச்சு

Published On 2023-11-08 05:01 GMT   |   Update On 2023-11-08 05:01 GMT
  • நாராயண பெருமாள், கனகராஜை கம்பால் தாக்கினார்.
  • கனகராஜ், நாராயணபெருமாள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதுடன், அவரது மொபட்டையும் அடித்து நொறுக்கினார்.

களக்காடு:

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், மேல்கரை வடக்குத்தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). தொழிலாளி. இவரது மனைவி சந்திரலேகா. கனகராஜின் தம்பி முத்துக்குமார் கோவையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் முத்துக்குமார் அதே பகுதியை சேர்ந்த நாராயணபெருமாள் (53) என்பவரது மகள் அனிதாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதல் திருமணம் என்பதால் நாராயணபெருமாள் திருமணத்தின் போது, தனது மகளுக்கு நகைகள் அணிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் கனகராஜ், நாராயணபெருமாளிடம் உனது மகளுக்கு நகைகள் போட வேண்டும் என்று கூறி வந்துள்ளார். மேலும் அடிக்கடி கனகராஜ், நாரயணபெருமாளிடம் உனது மகளுக்கு எப்போது நகை போடுவாய்? என்றும் கேட்டு வந்துள்ளார். நேற்று மாலை இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நாராயண பெருமாள், கனகராஜை கம்பால் தாக்கினார்.

இதுபோல கனகராஜ், நாராயணபெருமாள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதுடன், அவரது மொபட்டையும் அடித்து நொறுக்கினார்.

இதுகுறித்து இருவரும் களக்காடு போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கனகராஜூக்கும், நாராயண பெருமாளுக்கும் இரவில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது கனகராஜ், உனது மகளுக்கு இன்னும் நகை போடாமல் உள்ளாயே என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நாராயணபெருமாள், கனகராஜை மண்வெட்டியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நாராயணபெருமாளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News