உள்ளூர் செய்திகள்

திருமங்கலம் அருகே நடத்தை சந்தேகத்தில் பெண் அடித்துக்கொலை- கணவர் வெறிச்செயல்

Published On 2022-06-30 05:39 GMT   |   Update On 2022-06-30 05:39 GMT
  • கிருஷ்ணன் கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
  • அப்போது அவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி பி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது44). இவருடைய மனைவி முருகாம்பாள்(40). இவர்களுக்கு விக்னேஷ் (13) என்ற மகன் உள்ளான்.

கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி முருகாம்பாள் ஆகிய இருவரும் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். கிருஷ்ணன் காவலாளியாகவும், முருகாம்பாள் தொழிலாளியாகவும் பணிபுரிந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணன் கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது அவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார்.

இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. நேற்று இரவும் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த மனைவி முருகாம்பாள் தலையில் கிருஷ்ணன் கம்பியால் சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த முருகாம்பாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதையடுத்து கிருஷ்ணன் தனது மனைவியை கொன்று விட்டதாக கூறி கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அங்கு முருகாம்பாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

முருகாம்பாளை கிருஷ்ணன் அடித்து கொன்றது சிறுவனான அவர்களது மகன் விக்னேசுக்கு தெரியவில்லை. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தியபோது சிறுவன் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தான்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணனை கைது செய்தனர். நடத்தை சந்தேகத்தில் மனைவியை கணவர் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News