உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் இடி, மின்னலுடன் கனமழை

Published On 2023-08-10 13:03 IST   |   Update On 2023-08-10 13:03:00 IST
  • தருமபுரியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
  • மழையால் தருமபுரியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவாகியுள்ளது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 வாரமாக அதிக வெப்ப சலனம் நிலவி வந்தது. இந்த வெப்ப சலனத்தால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.

தருமபுரியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. திடீரென மாலை 6 மணியளவில் கருமேகம் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. பின்னர் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் தருமபுரி, இலக்கியம் பட்டி, அன்னசாகரம், அரூர், கோட்டப்பட்டி, வெள்ளப்புடையாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த கனமழையால் தருமபுரி நகர் நேதாஜி பைபாஸ் சாலையில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் ஆறாக ஓடியதால் போக்குவரத்து செல்லமுடியாமல் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். 108 ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி இன்றி வாகன நெரிசலில் மிதந்து சென்றது.

இந்த மழையால் தருமபுரியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 வாரமாக வெப்ப சலனத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News