தமிழ்நாடு செய்திகள்

Iran War | சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு - நவீன ராக்கெட் அடுப்புகளுக்கு மாறும் உணவகங்கள்

Published On 2026-03-11 11:56 IST   |   Update On 2026-03-11 11:56:00 IST
  • கியாஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதால் மதுரையில் பல ஓட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி வருகிறது.
  • ஒரு சிலிண்டருக்குச் செலவு செய்யும் தொகையில் விறகுகளை வாங்கினால் அதை வைத்து 5 மடங்கு அளவுக்கு இதில் கூடுதலாக சமைக்க முடியும்.

மதுரை:

இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக எரிவாயு விநியோகம் மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் சப்ளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணை இறக்குமதி பெருமளவு குறைந்துள்ளது. இதனால் கியாஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நேற்று முதல் வணிக நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படும் கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் முக்கிய உணவு விடுதிகளில் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே கியாஸ் சிலிண்டர்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும் இதே நிலை நீடித்தால் ஓட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும். இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கியாஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதால் மதுரையில் பல ஓட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி வருகிறது.

குறிப்பாக குறைந்த செலவில் விறகுகளை பயன்படுத்தி நீண்ட நேரம் எரியும் ராக்கெட் அடுப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் பயன்பாட்டு முறை சற்று வித்தியாசமானது.

ராக்கெட் அடுப்புகளில் விறகுகளை வைத்துச் சமைக்கக் கூடியது. இதில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய காற்றாடியும் இணைக்கப்படுகிறது. விறகுகளை அடுப்புக்குள் செலுத்திய பிறகு இந்த அடுப்பில் பொருத்தப்பட்டுள்ள காற்றாடி வேகமாகச் சுழலும். இதன் மூலம் காற்று வேகமாக உந்தப்பட்டு வழக்கமான விறகு அடுப்புகளை விட வேகமாகவும் அடர்த்தியாகவும் தீ எரிகிறது.

ஒரு சிலிண்டருக்குச் செலவு செய்யும் தொகையில் விறகுகளை வாங்கினால் அதை வைத்து 5 மடங்கு அளவுக்கு இதில் கூடுதலாக சமைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. ரூ. 4 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை இந்த ராக்கெட் அடுப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சிலிண்டர் பற்றாக்குறையால் மதுரை வைகை தென்கரை ரோட்டில் உள்ள இயற்கை அடுப்பு கடையில் ராக்கெட் அடுப்புகள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. டீக்கடை, ஓட்டல்காரர்கள் இந்த அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட ராக்கெட் அடுப்புகள் விற்பனையாகி உள்ளது. மேலும் ஆர்டர்களும் குவிந்து வருகின்றன.

Tags:    

Similar News