உள்ளூர் செய்திகள்
ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் தரைபாலத்தை மூழ்கடித்தபடி சென்ற காட்டாற்று வெள்ளம்.

ஆசனூர் மலைப்பகுதியில் கொட்டித் தீர்த்த மழை

Published On 2022-08-04 09:52 GMT   |   Update On 2022-08-04 09:52 GMT
  • சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகுதியில் அரிகியம், மாக்கம்பாளையம், கோம்பைதொட்டி, ஜகளியூர் புலிட்ட மலை கிராமங்களில் அடர்ந்த வனப்பகுதிகளில் 2 காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும்.
  • கடம்பூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குரும்பூர்பள்ளம் மற்றும் சர்க்கரைப்பள்ளம் ஆகிய இரண்டு காட்டாற்றுகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஆசனூர் சுற்றுவட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் லேசாக சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

குளியாடா, தேவர் நத்தம், கோட்டாடடை, மாவள்ளம், ஓசட்டி மற்றும் வனப்பகுதியில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் தரைப்பாலத்தைக் காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தது.

இதனால் ஆசனூரில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்லும் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதேபோல் ஆசனூர் ஓங்கல்வாடி சாலையில் உள்ள தரைப்பாலத்தையும் காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்ததால் அங்கும் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகுதியில் அரிகியம், மாக்கம்பாளையம், கோம்பைதொட்டி, ஜகளியூர் புலிட்ட மலை கிராமங்களில் அடர்ந்த வனப்பகுதிகளில் 2 காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும்.

இந்நிலையில் தற்போது கடம்பூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குரும்பூர்பள்ளம் மற்றும் சர்க்கரைப்பள்ளம் ஆகிய இரண்டு காட்டாற்றுகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக மார்க்கம்பாளையம் செல்லும் அரசு பஸ் குரும்பூர் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளத்தை கடக்க முடியாமல் கரையிலேயே நிற்கிறது. இதனால் மலை கிராம மக்கள் தங்களது கிராமங்களுக்கு செல்ல முடியாமலும், அன்றாட தேவைகளுக்கு பொருட்களை வாங்குவதற்கு கடம்பூர் மற்றும் சத்தியமங்கலம் செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

மாக்கம்பாளையம் மலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்வதற்காக தோளில் மூட்டைகளை சுமந்தபடி காட்டாற்று நீரில் இறங்கி ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

இதேபோல் நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தெங்குமரஹடா, கல்லாம் பாளையம், அல்லிமாயாரு ஆகிய வன கிராமங்களில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாயாற்றைக் கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனினும் ஒரு சிலர் ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றை கடந்து செல்கின்றனர். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றைக் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News