ஆலங்குளத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது
- பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பாக்கெட் கஞ்சா ரூ.500-க்கு விற்பனை செய்து வந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
- வழக்கில் தொடர்புடைய சொக்கலிங்கத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் நகர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அதில் ஒருவன் தப்பியோட முயற்சி செய்தான். அவனை மடக்கி பிடித்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் சோதனை மேற்கொண்டபோது அவர்கள் வைத்திருந்த பை ஒன்றில் சிறு சிறு பொட்டலங்களாக 320 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் மூவரும் அதே பகுதியை சேர்ந்த முத்துராமன்(வயது 24), மாரி செல்வம்(25) மற்றும் அருணாசலம்(22) ஆகியோர் என்பதும், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பாக்கெட் கஞ்சா ரூ.500-க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சொக்கலிங்கத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.