தமிழ்நாடு

நெல்லையப்பர் கோவிலில் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திய காந்திமதி யானை

Published On 2024-01-26 07:12 GMT   |   Update On 2024-01-26 12:13 GMT
  • தேசிய கொடியை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி ஏற்றி மரியாதை செய்தார்.
  • குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நெல்லை:

குடியரசு தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் குடியரசு தின விழாவையொட்டி கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணியால் வழங்கப்பட்ட தூண் முன்பு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவிலில் தேசியக்கொடி வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் யானை காந்திமதி முன் செல்ல ஊர்வலமாக கோவில் ஊழியர்களால் தேசியக்கொடி எடுத்து வரப்பட்டது.

தொடர்ந்து கொடிக்கம்பம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடியை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி ஏற்றி மரியாதை செய்தார்.

அப்போது கோவில் யானை காந்திமதி 3 முறை பிளிறி, தேசியக் கொடிக்கு வணக்கம் செய்தது. அதே வேளையில் கோவில் ஊழியர்களும் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.

தொடர்ந்து தேசியக் கொடிக்கு மகா தீபாராதனை நடைபெற்று குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News