ஆமையைக் கொன்று சமைப்பதாக சமூக வலைதளத்தில் பரவிய வீடியோ: வனத்துறை விளக்கம்
- வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகளில் வரும் நபர்கள் சிறப்பு இலக்குப் படையைச் சார்ந்தவர்கள் என சந்தேகிப்பதாக செய்திகள் வெளிவந்தன.
- தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்தவர்களோ இல்லை என்பதும் அச்சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
ஈரோடு :
வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள மங்களப்பட்டி வனப்பகுதியில் ஆமையைக் கொன்று சமைப்பதாக உள்ள வீடியோ மற்றும் புகைப்படக் காட்சிகளில் வரும் நபர்கள் சிறப்பு இலக்குப் படையைச் சார்ந்தவர்கள் என சந்தேகிப்பதாக 17.12.2023-ம் தேதி Facebook, Twitter, Whats-app உள்ளிட்ட சமூகவலை தளங்களில் செய்திகள் வேகமாகப் பரவின மற்றும் சில நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்தன.
இது குறித்து விசாரணை செய்ததில் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சிறப்பு இலக்குப் படையைச் சார்ந்தவர்களோ அல்லது தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்தவர்களோ இல்லை என்பதும் அச்சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
மேற்குறிப்பிட்ட சம்பவம் நான்கு வருடங்களுக்கு முன்னதாக வேறொரு மாநிலத்தில் நடந்துள்ளதாக தெரிகிறது. அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சிறப்பு இலக்குப் படையைச் சார்ந்தவர்கள் என்று சந்தேகிப்பதாகக் கூறப்பட்ட செய்தி தவறான செய்தியாகும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.