குளச்சலில் மீன் வரத்து குறைந்தது- மீனவர்கள் ஏமாற்றம்
- குளச்சல் கடலில் கடந்த வாரம் பலத்த காற்று காரணமாக விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் குளச்சல் கடல் பகுதியில் மீன்களின் வரத்து குறைந்தது.
- பைபர் வள்ளம், கட்டுமரங்களிலும் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்து திரும்பி சென்றனர்.
குளச்சல்:
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.
ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். இவற்றில் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து மீண்டும் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் வள்ளங்களில் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.
இதற்கிடையே குளச்சல் கடலில் கடந்த வாரம் பலத்த காற்று காரணமாக விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் குளச்சல் கடல் பகுதியில் மீன்களின் வரத்து குறைந்தது. பைபர் வள்ளம், கட்டுமரங்களிலும் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்து திரும்பி சென்றனர்.
இது குறித்து மீனவர் ஒருவர் கூறியதாவது:-
தற்போது ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் விசைப் படகுகளில் இந்த சீசனில் 'கேரை' மீன்கள் பிடிப்படும். ஆனால் தற்போது கேரை மீன்கள் கிடைக்கவில்லை. ஓரளவு கிளி மீன்களே கிடைக்கிறது. பிடிபடும் இந்த மீன்களும் விசைப்படகின் டீசல் செலவுக்கு கூட பற்றாக்குறையாக உள்ளது. கடல் நீரோட்டம் காரணமாக வள்ளங்களிலும் மீன்கள் பிடிபடவில்லை. கிடைக்கும் மீன்கள் செலவுக்கு கூட பத்தாததால் பெரும்பான்மையான வள்ளங்களும் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 10 நாட்களாக குளச்சல் பகுதியில் மீன் வரத்து குறைந்து உள்ளதால் வியாபாரிகள், மீன் பிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சில வள்ளங்களில் ஓரளவு சூரை, அயிரை மீன்கள் கிடைத்தன. இவை வழக்கத்தை விடவும் அதிக விலைக்கு போனது.