உள்ளூர் செய்திகள்

கருமத்தம்பட்டியில் போலி பெண் டாக்டர் கைது

Published On 2022-11-14 04:27 GMT   |   Update On 2022-11-14 04:27 GMT
  • உரிய தகுதி இன்றி மருத்துவம் பார்ப்பது உறுதியாகவே மணிகண்டன் சமூக நலத்துறை இணை இயக்குநர் சந்திராவிடம் புகார் தெரிவித்தார்.
  • அதன் பேரில் சமூக நலத்துறை இணை இயக்குநர் சந்திரா கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

சூலூர்:

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ்.

இவரது மனைவி சத்யா(வயது49). இவர் கருமத்தம்பட்டி நால்ரோடு அருகே மருந்துக்கடை நடத்தி வருகிறார்.

இந்த மருந்துக்கடையில் மருந்து, மாத்திரைகள் கொடுப்பது மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுவதாகவும் ஊரக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அதிகாரிகள் அந்த கடையை கண்காணிக்க தொடங்கினர். மேலும் சமூக நலத்துறையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அங்கு உண்மையிலேயே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறதா என்பதை அறிய சம்பவத்தன்று அந்த மருந்து கடைக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்த சத்யாவிடம், தனக்கு உடல் வலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு அவர் மருத்துவம் பார்த்து விட்டு மருந்துகளையும் கொடுத்தார்.

அவர் உரிய தகுதி இன்றி மருத்துவம் பார்ப்பது உறுதியாகவே, இதுகுறித்து மணிகண்டன் சமூக நலத்துறை இணை இயக்குநர் சந்திராவிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் சமூக நலத்துறை இணை இயக்குநர் சந்திரா கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததாக சத்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்தனர். விசாரணை முடிந்த பின்பு அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

Similar News