ஆனைகட்டி அருகே யானை தாக்கி கட்டிட தொழிலாளி பலி
- ஒரு தோட்டத்தின் அருகில் பதுங்கி இருந்த யானை ஒன்று ராஜப்பனை பின்தொடர்ந்து விரட்டி வந்தது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானை மிதித்து உயிரிழந்த ராஜப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை:
கோவை ஆனைகட்டி அருகே தூமனூரை சேர்ந்தவர் ராஜப்பன் (வயது43). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜப்பன் சம்பவத்தன்று வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்றார்.
பின்னர் மாலையில் வேலை முடிந்து மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். தூமனூர், செம்புக்கரை பிரிவு வழியாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தின் அருகில் பதுங்கி இருந்த யானை ஒன்று ராஜப்பனை பின்தொடர்ந்து விரட்டி வந்தது.
இதனால் அதிர்ச்சியான அவர் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனால் அதற்குள்ளாகவே அந்த யானை விரட்டி சென்று துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானை மிதித்து உயிரிழந்த ராஜப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.