15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைது
- சிறுமியின் தாய் இறந்து விட்டார் என்பதால் யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார்.
- வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த கேசவன் மற்றும் கரடிபாபுவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள சின்னாளபட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கேசவன் (வயது74). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இவர் அதே பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 7ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கடந்த 5 மாதமாக தனது அச்சகத்துக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
அந்த சிறுமியின் தாய் இறந்து விட்டார் என்பதால் யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கேசவன் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த கரடி பாபு (50) என்பவரும் சம்பவத்தன்று சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அருகில் இருந்த வீட்டுக்குள் ஓடி வந்தார். பின்னர் இது குறித்து சிறுமியின் சகோதரர் சின்னாளபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் இந்த வழக்கு சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் விக்டோரியாமேரி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த கேசவன் மற்றும் கரடிபாபுவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.