உள்ளூர் செய்திகள்

4ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேரை ஆசிரியை துடப்பத்தால் அடித்ததாக புகார்- கல்வி அதிகாரி நேரில் விசாரணை

Published On 2022-09-29 10:35 GMT   |   Update On 2022-09-29 10:36 GMT
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவாஸ் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் ஆசிரியை கரும்பலகையில் எழுதியவற்றை கையால் அழித்ததாக புகார் கூறப்பட்டது.
  • கோபமடைந்த ஆசிரியை துடப்பதால் மாணவர்களின் முட்டிக்கு கீழ் அடித்ததாக புகார் எழுந்தது.

அரியலூர்:

அரியலூர் வாலாஜா நகரம் பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகாபதி இவரது மகன் நிவாஸ் (வயது9). இந்த சிறுவன் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.

அரியலூர் வாலாஜா நகரம் கல்லாத்து பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசை தம்பி. அவரது மகன் சுசீந்திரன்( 9). இந்த சிறுவனும் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவாஸ் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் ஆசிரியை கரும்பலகையில் எழுதியவற்றை கையால் அழித்ததாக புகார் கூறப்பட்டது.

இதில் கோபமடைந்த அந்த ஆசிரியை துடப்பதால் அந்த மாணவர்களின் முட்டிக்கு கீழ் அடித்ததாக புகார் எழுந்தது.

இது பற்றி அறிந்த அந்த மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியரிடம் புகார் மனு அளித்தனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பள்ளிக்கூடத்தில் நேரடி விசாரணை நடத்தினார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஆசிரியை துடப்பத்தால் அடித்த சம்பவம் அரியலூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News