உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி செல்போனில் வீடியோ வெளியிட்டு டிரைவர் தற்கொலை

Published On 2023-06-30 12:39 IST   |   Update On 2023-06-30 12:39:00 IST
  • சொத்து தகராறில் மணிகண்டனுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
  • ஆத்திரமடைந்த மணிகண்டன் வீடியோ ஒன்றை தனது செல்போனில் பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அண்ணா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு வயதில் மகன் உள்ளனர்.

சொத்து தகராறில் இடத்தை அளக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளார். இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் மரத்தில் ஏறி தற்கொலைக்கும், மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்கவும் முயன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சொத்து தகராறில் அவருக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் ஆத்திரமடைந்த அவர் வீடியோ ஒன்றை தனது செல்போனில் நேற்று பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வீடியோ பதிவில் எனக்கு எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை சம்பந்தப்பட்ட தாசில்தார், சர்வேயர், விஏஓ மற்றும் அதிகாரிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள், புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நான் இறந்த பின்பாவது எனக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல் யாருக்கும் நடக்கக்கூடாது என்று பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News