உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே வீட்டில் தவறி விழுந்து இறந்ததாக நாடகம்: 70 வயது தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

Published On 2023-08-14 06:17 GMT   |   Update On 2023-08-14 06:17 GMT
  • தந்தை இறந்து போனதால் பயந்து போன ராமமூர்த்தி அவர் வீட்டில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமாகியது.
  • சொத்து தகராறில் தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள காக்க வாக்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி தனலட்சுமி இறந்து விட்டார். இவர்களுக்கு ஆதிசேஷன் என்ற மகன் உள்ளார். சுப்பிரமணியின் 2-வது மனைவி வசந்தா. இவர்களுக்கு ராமமூர்த்தி (45) என்ற மகன்,ஒரு மகள் உள்ளனர். சுப்பிரமணி 2-வது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி சுப்பிரமணி வீட்டில் தவறி விழுந்து இறந்து விட்டதாக உறவினர்களிடம் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் சுப்பிரமணி அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சுப்பிரமணியின் 2-வது மனைவியின் மகன் ராமமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தன்று இரவு ராமமூர்த்தி சொத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தந்தை சுப்பிரமணியை அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. சுப்பிரமணி தனது முதல் மனைவியின் மகன் ஆதிசேஷனுக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு ராமமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்த தகராறு கொலையில் முடிந்து உள்ளது. தந்தை இறந்து போனதால் பயந்து போன ராமமூர்த்தி அவர் வீட்டில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமாகியது.

இதைத்தொடர்ந்து ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். சொத்து தகராறில் தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News