உள்ளூர் செய்திகள்

பழனியில் அரசு அதிகாரிகளை கொல்ல முயன்ற தி.மு.க நிர்வாகிகள் 4 பேர் கைது

Published On 2023-10-18 06:10 GMT   |   Update On 2023-10-18 06:10 GMT
  • காரில் வந்த ஒரு கும்பலும் மணல் கடத்தலை தடுக்கமுயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
  • லாரியை ஓட்டிச்சென்றது காளிமுத்து என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி பொன்னிமலை சித்தன்கோவில் அருகே சட்டவிரோதமாக மணல் திருடப்பட்டு வருகிறது என போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. கடந்த 13-ந்தேதி வி.ஏ.ஓ கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர் இலாகிபானு, உதவியாளார் மகுடீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு மணல் திருடப்பட்டு கொண்டிருந்தது கண்டறியப்படவே லாரியை பறிமுதல் செய்தனர். ஆயக்குடி போலீஸ் நிலையத்திற்கு வி.ஏ.ஓ.க்கள் கருப்புசாமி, பிரேம்குமார், உதவியாளர் மகுடீஸ்வரன் ஆகியோர் கொண்டுவந்தனர். வரும் வழியில் லாரியில் இருநத மணலை கொட்டி அதிகாரிகளை கொல்ல முயன்றனர்.

மேலும் காரில் வந்த ஒரு கும்பலும் மணல் கடத்தலை தடுக்கமுயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து வி.ஏ.ஓ கருப்புசாமி ஆயக்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் பாஸ்கரன் மற்றும் சக்திவேல் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். இதனிடையே கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட பாலசமுத்திரத்தை சேர்ந்த சக்திவேல்(60), அவரது மகன்கள் ரமேஷ்(33), கார்த்தி என்ற காளிமுத்து(30), தி.மு.க மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாஸ்கரன்(48) ஆகிய 4 பேரையும் கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று லாரியை ஓட்டிச்சென்றது காளிமுத்து என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயக்குடி போலீசார் கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News