ஸ்தலசயன பெருமாள் கோவில் பக்தர்கள் கழிப்பறை செல்ல கிரில் ஏறி குதிக்கும் நிலைமை
- கழிப்பறை ரெடியாகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கோவில் நிர்வாகம் திறக்கவில்லை.
- பக்தர்கள் கழிப்பறையின் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் வளாகத்தில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், வளாகத்தின் திறந்தவெளி பகுதியை பயன்படுத்தி அசுத்தம் செய்து வந்தனர். இதனால் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் கோவில் வளாகத்தின் தென் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து நவீன கழிப்பறை கட்டி அதை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.
கழிப்பறை ரெடியாகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கோவில் நிர்வாகம் திறக்கவில்லை. பக்தர்கள் கழிப்பறையின் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அறநிலையத்துறை இணை ஆணையர் வானதியிடம் கேட்டபோது, எங்கள் அனுமதியும், தொல்லியல்துறை அனுமதியும் இல்லாமல் கட்டியுள்ளனர் என்றார். கோவில் வளாகத்தில் பல மாதங்கள் நடைபெற்ற கட்டுமான பணிகள் எப்படி இணை ஆணையருக்கு தெரியாமல் இருக்கும் என்ற கேள்வி தற்போது பக்தர்களிடம் எழுந்துள்ளது.