ஜி.எஸ்.டி. வரிக்கு ஆதரவான எங்களுக்கு பட்டாசு பூங்கா தேவை- பட்டாசு வணிகர்கள் அரசுக்கு கோரிக்கை
- ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டாசு வணிக வளாகத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்து, பட்டாசு பூங்கா அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
- தற்காலிக பட்டாசு கடை உரிமம் தீபாவளிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக வழங்க அரசாங்கத்தை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பின் 12-வது மாநில செயற்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமி ராஜா, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் தசரதன் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் 150 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நிரந்தர பட்டாசு கடை உரிமங்களை மூன்று வருடங்களுக்கு புதுப்பித்து வழங்கவும், புதுப்பிக்க விண்ணப்பித்த காலத்தில் இருந்து இரண்டு மாதத்தில் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் புதுப்பித்து வழங்கவும், தற்காலிக பட்டாசு கடை உரிமம் தீபாவளிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக வழங்க அரசாங்கத்தை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜி.எஸ்.டி வரியை முறையாக செலுத்தி தொழில் செய்யும் எங்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டாசு வணிக வளாகத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்து, பட்டாசு பூங்கா அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கையும் வைத்தனர்.