உள்ளூர் செய்திகள்

மது விருந்தில் மோதல்- தங்கையின் கணவரை உருட்டுக்கட்டையால் அடித்து கொன்ற தொழிலாளி

Published On 2023-11-10 10:46 IST   |   Update On 2023-11-10 11:27:00 IST
  • 2 பேரும் போதையில் வீட்டில் உள்ள அறையில் படுக்க சென்றனர்.
  • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

குனியமுத்தூர்:

கோவை வெள்ளலூர் அருகே உள்ள வள்ளியம்மன்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). கூலித் தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நடந்த மனைவியின் அண்ணன் சக்திவேல் (40) என்பவரது மகள் புனித நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு சென்றார்.

நிகழ்ச்சி முடிந்ததும் உறவினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த போது நாகராஜ், சக்திவேல் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் போதையில் வீட்டில் உள்ள அறையில் படுக்க சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் அங்கு இருந்த உருட்டு கட்டையால் நாகராஜின் தலையில் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். என்ன நடந்தது என்பது தெரியாமல் சக்திவேல் அங்கே படுத்து தூங்கினார். நள்ளிரவு அறைக்கு சென்றவர்கள் நாகராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவர்கள் இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் போதை தெளிந்து எழுந்த சக்திவேல் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புனித நீராட்டு விழா நிகழ்ச்சியில் நடந்த மது விருந்தில் தங்கையின் கணவரை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த சக்திவேலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News