கோர்ட்டில் கையெழுத்து போட்டு திரும்பிய வாலிபர்-நண்பருக்கு அரிவாள் வெட்டு
- நித்தீஷ்குமார் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவையை சேர்ந்தவர் நித்தீஷ்குமார் (வயது 22). இவர் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் பாலியல் வழக்கு உள்ளது. எனவே அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்து இருந்தனர்.
இந்த நிலையில் நித்தீஷ்குமார் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அவர் தினமும் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி நித்தீஷ்குமார் இன்று காலை கையெழுத்து போடுவதற்காக, கோவை மகளிர் கோர்ட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு ரஞ்சித், கார்த்திக் ஆகிய 2 பேர் பாதுகாவலாக வந்திருந்தனர்.
கோவை நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டபிறகு அவர்கள் மீண்டும் காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றனர். அப்போது ராம் நகர் தனியார் வங்கி முன்பாக, அவர்களை 2 மோட்டார் சைக்கிள்கள் வழிமறித்தன.
வண்டியில் இருந்து பட்டாக்கத்தி, அரிவாளுடன் இறங்கிய 6 பேர் கும்பல் தாக்குதலில் ஈடுபட முயன்றது. எனவே அதிர்ச்சி அடைந்த 3 பேரும் தலைதெறிக்க தப்பி ஓடினர்.
இருந்தபோதிலும் 6 பேர் கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் நித்தீஷ்குமார், ரஞ்சித்துக்கு படுகாயம் ஏற்பட்டது. கார்த்திக் சிறுகாயங்களுடன் தப்பினார். அதன்பிறகு அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அரிவாள் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய நித்தீஷ், ரஞ்சித்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் ராம்நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நித்தீஷ்குமார் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏற்கெனவே பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவரால் பாதிக்கப்பட்டவர்கள் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.