உள்ளூர் செய்திகள்

காசியால் பாதிக்கப்பட்ட மேலும் 60 இளம்பெண்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் ரகசிய விசாரணை

Published On 2022-07-01 07:11 GMT   |   Update On 2022-07-01 08:30 GMT
  • காசியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த சில ஆதாரங்கள் அழிக்கப்பட்டதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்தனர்.
  • அதனை அழித்தது காசியின் தந்தை தங்கபாண்டியன் என தெரியவந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில், கணேச புரம் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் சுஜி என்ற காசி.

காசி மீது சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு புகார் கொடுத்தார்.

அதில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம் மூலம் காசியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட நெருக்கத்தை பயன்படுத்தி காசி தன்னை ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகாரை அவர் சென்னையில் இருந்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி இருந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் காசியின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி ஆய்வு செய்த போது அதில் நூற்றுக்கணக்கான பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த போலீசார் காசியுடன் தொடர்பில் இருந்த பெண்கள் பற்றிய விபரங்களை சேகரித்தனர். அப்போதுதான் காசி, நாகர்கோவில் மட்டுமின்றி சென்னை, பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களுடன் தொடர்பில் இருந்ததும், அவர்களுடன் நெருங்கி பழகி, அந்த பெண்களை ஆபாச படம் எடுத்ததும் தெரியவந்தது.

இதில் குடும்ப பெண்கள், கல்லூரி பேராசிரியை, பெண் என்ஜினீயர், பள்ளி, கல்லூரி மாணவிகள் என பலரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களை பட்டியலிட்ட போது சுமார் 120 பேர் காசியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

முக்கிய பிரமுகர்களின் மனைவியர், மகள்களுக்கும் இதில் தொடர்பு இருந்ததால் இந்த விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் மாற்றப்பட்டது.

அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த சாந்தி இந்த வழக்கை சவாலாக எடுத்து விசாரித்தார். இதையடுத்து காசி மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடந்த போது சுமார் 120 பெண்கள் காசியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களில் 60 பேரிடம் போலீசார் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். அதன்மூலம் 6 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது. இதில்தான் காசியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த சில ஆதாரங்கள் அழிக்கப்பட்டதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்தனர். அதனை அழித்தது காசியின் தந்தை தங்கபாண்டியன் என தெரியவந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் தங்க பாண்டியன் மற்றும் காசி ஆகியோரில் தங்கபாண்டியன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த போது, சி.பி.சி.ஐ.டி. போலீசார் காசி பற்றிய விபரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

அதில் இருந்த தகவலை பார்த்துதான் நீதிபதி அதிர்ந்து போனார். 1000-க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள், வீடியோக்கள் இருப்பதாக போலீசார் கூறிய தகவல் அதிர்ச்சியாக இருப்பதாக கூறிய நீதிபதி, வழக்கு விசாரணை முடியாத நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தார்.

இதுபற்றி சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் கேட்டபோது, காசி மீது இன்னும் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளோம்.

இந்த வழக்கில் இன்னும் பலர் சாட்சியம் அளிக்க வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம். அவர்களிடமும் விசாரித்து குற்றப்பத்திரிகை தயாரிக்கப்படும், என்றனர்.

காசி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News