ஈரோட்டில் போலிமதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு- 4 பேர் சிக்கினர்
- தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
- போலியாக ஒரு மது தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது.
ஈரோடு:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த மது பாட்டில்கள் போலியானது என்றும் ஈரோடு மாவட்டம் சூளை பகுதியில் இருந்து கொண்டு வருவதாகவும் காரில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கும்பகோணம் போலீசார் ஈரோடு போலீசாருடன் இணைந்து ஈரோடு சூளை பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு போலியாக ஒரு மது தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது.
மேலும் அங்கு இருந்த 4பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிசென்று மடக்கி பிடித்தனர்.
மேலும் போலீசார் மதுபான தொழிற்சாலையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு போலி மது பானங்கள் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களான எரிசாராயம், பல்வேறு கலர் பொடிகள், மூடிகள், போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
முதல் கட்ட விசாரணையில் இந்தபோலி மதுபான தொழிற்சாலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கடந்த சில மாதங்களாக மது பாட்டில்களை கொண்டு சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் இந்த மதுபாட்டில்களை எப்படி விற்பனை செய்தார்கள், யார் மூலம் விற்பனை செய்தார்கள் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.