உள்ளூர் செய்திகள்

ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தி கொலை- கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்

Published On 2022-11-25 14:56 IST   |   Update On 2022-11-25 14:56:00 IST
  • ஜேக்கப் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில், அவரது கால்கள் மற்றும் கையை நாய்கள் கடித்து குதறி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
  • நாய்கள் கடித்து குதறியதா? அல்லது கொலையாளிகள் கை, கால்களை துண்டித்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த அபிஷேகப்பட்டியை சேர்ந்தவர் ஜேக்கப் ஆனந்தராஜ் (வயது 63). கட்டுமான தொழிலதிபர்.

இவர் கடந்த 22-ந்தேதி தனது பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக காரில் நெல்லை டவுனுக்கு சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஜேக்கப் ஆனந்தராஜை தேடிவந்தனர்.

இந்நிலையில் பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள குளத்தங்கரையில் இன்று ஜேக்கப் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது 2 கால்களும், ஒரு கையும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ஜேக்கப் ஆனந்தராஜின் குடும்பத்தினரை ஒரு கும்பல் கடந்த 2 நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜேக்கப் ஆனந்தராஜை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் தரவேண்டும் என கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மிரட்டல் விடுத்தவர்கள் இந்தியில் பேசியதாக தெரிகிறது. எனவே கடத்தல் கும்பல் வடமாநிலத்தை சேர்ந்தவர்களா? அவர்கள் யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

இதற்கிடையே ஜேக்கப் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில், அவரது கால்கள் மற்றும் கையை நாய்கள் கடித்து குதறி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். நாய்கள் கடித்து குதறியதா? அல்லது கொலையாளிகள் கை, கால்களை துண்டித்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News