உள்ளூர் செய்திகள்

கண்மாயில் எரிந்த நிலையில் 2 அடி நீளத்திற்கு கிடந்த எலும்பு துண்டுகள்: மாந்திரீக வேலைக்கு பயன்படுத்தியதா? என விசாரணை

Published On 2023-11-01 15:51 IST   |   Update On 2023-11-01 15:51:00 IST
  • எலும்புக் கூடுகள் கிடந்த இடத்தில் வேறு ஏதாவது தடயங்கள் உள்ளனவா என்றும் போலீசார் அந்த பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
  • அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் யாராவது வெளியில் சென்று மாயமாகி இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மிகப்பெரிய ஆதனூர் கண்மாய் அமைந்துள்ளது. போதிய மழையின்மை காரணமாக குறைந்த அளவே தற்போது தண்ணீர் இருக்கிறது. இந்த நிலையில் கண்மாய் பகுதிக்கு சென்றவர்கள் அங்கு எரிந்த நிலையில் எலும்புக் கூடுகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுபற்றி அவர்கள் அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 2 அடி நீளத்திற்கு எலும்பு துண்டுகள் ஆங்காங்கே கிடந்தன. ஆனால் அது மனித எலும்புக்கூடா? அல்லது விலங்குகளின் எலும்புக் கூடா? என்று தெரியவில்லை.

அதனை கைப்பற்றிய போலீசார் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். எலும்புக் கூடுகள் கிடந்த இடத்தில் வேறு ஏதாவது தடயங்கள் உள்ளனவா என்றும் போலீசார் அந்த பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

அதேநேரத்தில் அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் யாராவது வெளியில் சென்று மாயமாகி இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களை கடத்தி கொண்டு வந்து இங்கு வைத்து எரித்து கொலை செய்தார்களா, மாந்திரீக வேலைக்காக இது போன்ற சம்பவம் நடந்ததா? என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்மாய்க்குள் எரிந்த நிலையில் எலும்புக்கூடுகள் கிடந்தது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News