உள்ளூர் செய்திகள்

நகராட்சி அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பொன்னேரியில் தேசிய கொடிக்காக வியாபாரிகளிடம் பணம் வசூலித்து மோசடி- அதிகாரிகளை கண்டித்து பா.ஜனதா போராட்டம்

Published On 2022-08-13 15:24 IST   |   Update On 2022-08-13 15:25:00 IST
  • பொது மக்களுக்கு இலவசமாக தேசிய கொடியினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பா.ஜ.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பொன்னேரி:

பொன்னேரியில் நகராட்சி அதிகாரிகள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடியினை வழங்குவதற்காக அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் சிலரிடம் நன்கொடை வசூலித்ததாக கூறப்படுகிறது.

அந்த பணத்தில் தேசிய கொடியினை வாங்கி பொது மக்களுக்கு வழங்காமல் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறி பா.ஜ.க.வினர் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரினார்கள்.

பா.ஜ.க. மாவட்ட தலைவர் சரவணன், துணைத் தலைவர் சோமு ராஜசேகர் தலைமையில் நேற்று இரவு 8 மணி முதல் 12 மணி வரை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தேசிய கொடியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, தகவல் அறிந்து வந்த போலீசார் முன் அனுமதி இன்றி போராட்டம் நடத்தக்கூடாது என்பதால் அமைதியாக கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை கேட்காமல் பா.ஜ.க.வினர் தேசிய கொடியில் மோசடி செய்த அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் பொது மக்களுக்கு இலவசமாக தேசிய கொடியினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பின்னர் நகராட்சி நிர்வாகம் இன்று மாலைக்குள் அனைத்து வீடுகளுக்கும் கொடி வழங்குவதாக தெரிவித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் பா.ஜ.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News