உள்ளூர் செய்திகள்

105 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்

Published On 2022-11-30 04:49 GMT   |   Update On 2022-11-30 04:49 GMT
  • நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை எந்த நேரத்திலும் 105 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • பவானி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து 105 அடியை நெருங்கி வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 509 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் கீழ் பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை எந்த நேரத்திலும் 105 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பவானி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் உஷார் படுத்தப்பட்டு அணை நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News