பர்கூர் அருகே நள்ளிரவு டாஸ்மாக் கடையில் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.3.50 லட்சம் பணம் கொள்ளை
- டாஸ்மாக் கடையில் புகுந்து மாதேஷ் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
- கல்லா பெட்டியில் இருந்த ரூ.3.50 லட்சம் ரொக்கம், 3, மதுபெட்டிகள் மற்றும் செல்லிடப்பேசிகளை கொள்ளையடித்து சென்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தபால் மேடு என்னும் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் கல்லாவியை எடுத்த வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (48) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். சூப்பர்வைசராக கிருஷ்ணன் என்பவர் இருந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மதுவிற்பனை படுஜோராக நடந்தது.
இதையடுத்து இரவு திடீரென மர்ம நபர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கினர். அவர்கள் முகமூடி அணிந்து இருந்தனர். பின்னர் டாஸ்மாக் கடையில் புகுந்து மாதேஷ் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
பின்னர் கல்லா பெட்டியில் இருந்த ரூ.3.50 லட்சம் ரொக்கம், 3, மதுபெட்டிகள் மற்றும் செல்லிடப்பேசிகளை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.