உள்ளூர் செய்திகள்

டி.என்.பாளையம் அருகே 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது

Published On 2024-04-22 09:20 GMT   |   Update On 2024-04-22 09:20 GMT
  • ஆசாரிமேடு என்ற பகுதியில் சென்றபோது பூமணிக்கு பிரசவ வலி அதிகரித்தது.
  • நிலைமையை புரிந்து கொண்ட ஓட்டுனர் உதயகுமார் ஆம்புலன்சை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தினார்.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் தாலுக்கா, டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூமணி (29 வயது). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பூமணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். டி.என்.பாளையம் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூமணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆசாரிமேடு என்ற பகுதியில் சென்றபோது பூமணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையை புரிந்து கொண்ட ஓட்டுனர் உதயகுமார் ஆம்புலன்சை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தினார். அவசரகால மருத்துவ உதவியாளர் பவித்ரா, கர்ப்பிணி பூமணிக்கு பிரசவம் பார்த்தார்.

இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகு தாய் மற்றும் குழந்தைக்கு முதலுதவியளித்து கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ உதவியாளர் பவித்ரா மற்றும் அவசர சிகிச்சை வாகன ஓட்டுனர் உதயகுமார் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News