உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவியுடன் ஊர் சுற்றியதால் ஆத்திரம்: மகளின் காதலனை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர்

Published On 2022-09-02 04:31 GMT   |   Update On 2022-09-02 04:31 GMT
  • மகளை காதலித்த வாலிபரை மாணவியின் தந்தை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • சம்பவம் குறித்து விசாரித்த ஆர்.எஸ்.புரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தை மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்தனர்.

கோவை, :

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 24 வயது வாலிபர். இவர் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

கடந்த ஜூலை மாதம் மாணவி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் தனது காதலனுடன் வெளியே சென்றார். பள்ளிக்கு செல்லாததால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி பள்ளிக்கு வராதது குறித்து ஆட்டோ டிரைவரான அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவியின் தந்தை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாணவி மற்றும் வாலிபர், அவரது பெற்றோரை அழைத்து விசாரித்தனர். பின்னர் மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மாணவியை அவரது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை.

வாலிபர் மீது மாணவியின் தந்தைக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இது குறித்து அவர் தனது நண்பர்களிடம் தெரிவித்தார்.

சம்பவத்தன்று மாணவியின் தந்தை வாலிபரை உன்னிடம் பேச வேண்டும் என ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தியேட்டர் அருகே வருமாறு அழைத்தார். அதன்படி வாலிபர் அங்கு சென்றார். அங்கு மாணவியின் தந்தை தனது நண்பர்கள் 2 பேரும் நின்று கொண்டு இருந்தார். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகள் பேசி வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

மாணவியின் தந்தை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து வாலிபரை குத்தினார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனையடுத்து 3 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தை மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகிறார்கள்.

மகளை காதலித்த வாலிபரை மாணவியின் தந்தை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News