ஸ்ரீபெரும்புதூரில் இந்திராகாந்தி சிலையை அகற்ற முயற்சி- காங்கிரசார் முற்றுகை போராட்டம்
- ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
- காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
சென்னை-பெங்களூரு தேசிய நெடுச்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறைனர் அகற்றி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலை உள்ளது. இந்த சிலையை நெடுஞ்சாலை துறையினர் அகற்ற முடிவு செய்தனர். இன்று காலை ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் இந்திரா காந்தி சிலையை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.
சிலையின் அடிபாகத்தை இடித்து கொண்டு இருந்தனர். இது குறித்து தகவல் காட்டு தீ போல அந்த பகுதியில் பரவியது.
தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் கட்சியினர் அங்கு குவிந்து சிலையை அகற்றும் பணியை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். அங்கு பதற்றம் நிலவியது.
ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
அதன் பின்னர் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி சிலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்குள் ஏன் சிலையின் பீடத்தை உடைத்தீர்கள் என கண்டித்தார். பின்னர் சிலையை அகற்றும் பணியை நிறுத்துமாறு கூறினார்.
இதையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சிலையை அகற்றும் பணியை நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம், பரபரப்பு நிலவியது.
இந்த இந்திரா காந்தி சிலையை முன்னாள் பிரதமர் பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.