அரக்கோணத்தில் சென்னை ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.47 லட்சம் ஹவாலா பணமா?- போலீசார் விசாரணை
- பணத்திற்கு முறையான ஆவணம் இல்லாததால் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
- ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
வெளி மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் அரக்கோணத்தில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று மதியம் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து சென்னை சென்டிரல் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை செய்தனர்.
பொது பெட்டியில் சோதனை செய்த போது ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஜீலான் (வயது 45) என்பவர் வைத்திருந்தபையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது பணத்திற்கு சரியான கணக்கு இல்லை.
அதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்து சரிபார்த்தபோது அதில் ரூ.47 லட்சத்து 26 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
அந்தபணத்தை சென்னை வருமான வரி அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அந்த பணத்திற்கு முறையான ஆவணம் இல்லாததால் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.