திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
- போராட்டத்தில் அங்கன்வாடி காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டு
- போராட்டத்தையொட்டி 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணி மேகலை தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரி, மாவட்ட செயலாளர் லதா, பொருளாளர் உமாராணி, இணைச் செயலாளர்கள் சாந்தி, உமாராணி, பிரவீனா, பரமேஸ்வரி உள்ளிட்ட 14 ஒன்றியங்களில் பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் அங்கன்வாடி காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் அரசு ஊழியர்களுக்கு போல் வழங்கிட வேண்டும், தற்போது தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் நலன்களை கருதி கோடை காலமான மே மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது போன்று அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை அளித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
போராட்டத்தையொட்டி 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.