உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை: பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு

Published On 2023-10-09 04:20 GMT   |   Update On 2023-10-09 04:20 GMT
  • முத்துவேல்- ராசாத்தி இருவரும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் வந்துள்ளனர்.
  • தம்பதி என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையத்தில் ஒரு வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அந்த வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், இளம்பெண் விஷம் குடித்தும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்கள் ஊர், பெயர் விவரம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த முத்துவேல் (வயது 30) மற்றும் அதே ஊரை சேர்ந்த ராசாத்தி (28) என்பது தெரியவந்தது. ராசாத்தி ஏற்கனவே திருமணம் ஆனவர். குழந்தை இல்லை.

இந்தநிலையில் முத்துவேலுடன் ராசாத்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த உறவினர்கள் அவர்களை கண்டித்துள்ளனர். இருப்பினும் 2பேரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

தொடர்ந்து உறவினர்கள் கண்டிக்கவே, முத்துவேல்- ராசாத்தி இருவரும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் வந்துள்ளனர். பின்னர் தம்பதி என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

மேலும் இருவரும் வீட்டை விட்டு சென்று விட்டதால் குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களிடம் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர்கள் தற்கொலை செய்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News