உள்ளூர் செய்திகள்

புளியங்குடியில் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி

Published On 2023-02-19 04:57 GMT   |   Update On 2023-02-19 04:57 GMT
  • புளியங்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள கோவிந்தபேரி குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • உடனடியாக போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது குளத்தில் இறந்துகிடந்தது காணாமல் போன சிறுவன் முகமது ரஷீத் என்பது தெரியவந்தது.

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி புதுமனை 1-வது தெருவை சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முகமது ரஷீத்(வயது 8). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்து வெளியே விளையாட சென்ற முகமது ரஷீத் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

ஆனால் எங்கு தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து புளியங்குடி போலீஸ் நிலையத்தில் அப்துல் காதர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று புளியங்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள கோவிந்தபேரி குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது குளத்தில் இறந்துகிடந்தது காணாமல் போன சிறுவன் முகமது ரஷீத் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காணாமல் போன முகமது ரஷீத் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சென்ற இடத்தில் குளத்தில் தவறி விழுந்து மூழ்கி இறந்திருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News