உள்ளூர் செய்திகள்
மறைமலைநகர் அருகே கல்லூரி பேராசிரியர் வீட்டில் 42 பவுன் நகை-பணம் கொள்ளை
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தோஷ் வீட்டை பூட்டிவிட்டு ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
- கொள்ளை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தோஷ் வீட்டை பூட்டிவிட்டு ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அவரது மனைவியும் மகனும் வேளச்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தனர்.
நேற்று மாலை அவர்கள் வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் பீரோவை உடைத்து 42 பவுன் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.