உள்ளூர் செய்திகள்

கும்பகோணத்தில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் குழந்தை பலி

Published On 2022-06-08 08:16 GMT   |   Update On 2022-06-08 08:16 GMT
  • தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
  • இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெசன்ட் ரோட்டை சேர்ந்தவர் ராஜா (வயது 42). இவர் நகைக்கு பாலீஷ் போடும் தொழில் செய்து வருகிறார்.

இவரது மனைவி தேன்மொழி (35). இவர்களுக்கு கோபிகா (4) என்ற மகளும், கேசவ் (3) என்ற மகனும் உள்ளனர். இதில் குழந்தை கோபிகா யூ.கே.ஜி. படித்து வந்தார்.

இந்நிலையில் கும்பகோணம் பச்சையப்பன் தெருவில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் 4-வது மாடியில் வசிக்கும் தனது தங்கை வீட்டில் கோபிகாவை பார்த்து கொள்ளுமாறு கூறி விட்டு ராஜா சென்றார்.

அப்போது வீட்டு பால்கனியில் கோபிகா தனியாக விளையாடி கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக பால்கனியில் இருந்து கோபிகா தவறி கீழே விழுந்தார். இதில் ரத்த காயங்களுடன் குழந்தை மயங்கி கிடந்தது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை கோபிகா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News