விருதுநகர் அருகே மின்வேலியில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலி
- வன விலங்குகள் வராமல் இருப்பதற்காகவும், தேங்காய் திருட்டை தடுக்கவும் தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
- தினமும் இரவு மின்வேலியை இயக்கி விட்டு மறுநாள் காலை மோகன்ராஜ் ஆப் செய்வது வழக்கம்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள முதலிப்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி (வயது50). சுமை தூக்கும் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள சதானந்தபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (42). தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
நண்பர்களான 2 பேரும் இன்று காலை அங்குள்ள மோகன்ராஜ் (60) என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றனர். வன விலங்குகள் வராமல் இருப்பதற்காகவும், தேங்காய் திருட்டை தடுக்கவும் தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
தினமும் இரவு அதனை இயக்கி விட்டு மறுநாள் காலை மோகன்ராஜ் ஆப் செய்வது வழக்கம். ஆனால் இன்று அதை மறந்து விட்டார். இதற்கிடையில் தோட்டத்து கிணற்றில் குளிக்க வந்த முனியசாமி, சீனிவாசன் ஆகியோர் மின்வேலியை தொட்டதாக தெரிகிறது.
இதில் மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 2 பேர் இறந்து கிடப்பதை பார்த்து வச்சக்காரப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.