உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் 93 ஆயிரம் பணம் பறித்த திருநங்கைகள் கைது

Published On 2023-10-04 10:01 GMT   |   Update On 2023-10-04 10:01 GMT
  • சில நேரங்களில் உல்லாசத்திற்கு அழைத்துச் செல்லும் ஆண்களிடம் அத்துமீறுவதோடு, அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை மிரட்டி வாங்கி கொண்டு செல்வதாக புகார்கள் வந்தன.
  • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் பஸ் நிலையம் மற்றும் ஜவான் பவன் சாலையில் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் திருநங்கைகள் அவ்வழியாக செல்லக்கூடிய நபர்களிடம் உல்லாசத்திற்கு அழைப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

மேலும் சில நேரங்களில் உல்லாசத்திற்கு அழைத்துச் செல்லும் ஆண்களிடம் அத்துமீறுவதோடு, அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை மிரட்டி வாங்கி கொண்டு செல்வதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் பஸ் நிலையம் பகுதியில் வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்றிருந்த 2 திருநங்கைகள் அந்த வாலிபரை உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த வாலிபரிடம் கட்டாக இருந்த பணத்தை திடீரென்று 2 திருநங்கைகள் பறித்துக் கொண்டனர். மேலும் அந்த வாலிபரை மிரட்டி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்து கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலைய போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் உடனடியாக 2 திருநங்கைகளை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்களது பெயர் சந்தியா, அஞ்சு என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் சோதனை செய்தபோது வாலிபரிடம் இருந்து பறித்த 93 ஆயிரம் பணம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினார்கள். திருநங்கைகள் சந்தியா, அஞ்சுவை கைது செய்தனர்.

இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் ஆண்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், இதனை மீறி யாரேனும் தட்டி கேட்டால் அவர்களை திருநங்கைகள் சூழ்ந்து மிரட்டி வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News