உள்ளூர் செய்திகள்

வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சீறிபாய்ந்து செல்வதை படத்தில் காணலாம்.

வீராணம் ஏரியில் 2 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு- 2,000 ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது

Published On 2022-11-13 09:21 IST   |   Update On 2022-11-13 09:21:00 IST
  • கடந்த 3 நாட்களாக வீராணம் ஏரியின் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது.
  • கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக கூடுதல் தண்ணீர் வருகிறது.

காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே திறக்கப்பட்டதால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

எனவே, வீராணம் ஏரி கடந்த மாதமே முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. அதன் பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் உபரிநீர் வி.என்.எஸ். மதகு வழியாக திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக வீராணம் ஏரியின் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. அதோடு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக கூடுதல் தண்ணீர் வருகிறது.

எனவே, ஏரியின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 47.50 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக வீராணம் ஏரிக்கு அதிகளவு நீர் வந்து கொண்டிருக்கிறது.

எனவே ஏரிக்கு வரும் உபரிநீரான 2 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் வீராணம் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீராணம் ஏரியில் திறக்கப்படும் தண்ணீர் சாலியத்தோப்பு, உசூப்பூர், கடவாச்சேரி, வல்லம்படுகை, ராதவிளாகம், பின்னத்தூர், தில்லைவிடங்கன், வடமூர், தெம்மூர், பரிவிளாகம், சிவாயம், பொன்னாந்திட்டு, நாஞ்சனூர், குமராட்சி, கொளக்குடி, திருநாரையூர், அண்ணாமலை நகர், அண்ணாநகர் உள்பட 30 கிராமங்களில் உள்ள 2,000 ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

Tags:    

Similar News