உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் கால்வாயில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்- பொதுமக்களை மிரட்டும் விஷ பாம்புகள்

Published On 2023-06-25 09:49 GMT   |   Update On 2023-06-25 09:49 GMT
  • கால்வாயில் டன் கணக்கில் நெகிழி கழிவுகள் மிதப்பதால் தண்ணீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
  • குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி வருகிறார்கள்.

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கடந்த 1992-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பு சுமார் 125 ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆகும். இங்கு 6 பிளாக்குகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தற்போது பெய்த பலத்த மழையின்போது மழைத் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கியது.

இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகள் தேங்கி கிடப்பதால் கழிவு தண்ணீர் சரிவர செல்ல முடியவில்லை.

மேலும் இந்த கழிவு தண்ணீர் சுத்தி கரிக்கப்படாமல் நேரடியாக ஏரியில் சென்று கலக்கிறது. இதனால் ஏரித்தண்ணீர் மாசடைந்து வரும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:-

வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன.

மேலும் கால்வாயில் டன் கணக்கில் நெகிழி கழிவுகள் மிதப்பதால் தண்ணீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

அடுத்து வரும் மழையை கருத்தில் கொண்டு தங்கு தடையின்றி மழைத்தண்ணீர் வடிந்து செல்ல மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்குள்ள கழிவுநீர் கால் வாய் தண்ணீர் ஏரியில் நேரடியாக கலந்து ஏரித் தண்ணீர் மாசடைந்து வருகிறது.

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைக்கும்போது சுகாதார நிலையம், வணிக வளாகம், குடிநீர் மேல்நிலை தொட்டி ஆகியவற்றிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன.

இவைகள் அனைத்தும் 28 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.

இதனால் கட்டிடங்கள் விரிசல் அடைந்து முற்றிலுமாக சேதம் அடைந்தும் வருகிறது.

மேலும், இந்த கட்டிங்களின் பல பகுதிகளில் மரங்கள், செடிகள் வளர்ந்து சேதம் அடைந்து வருகின்றன. இதனால் இந்த கட்டிடங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

பாழடைந்த கட்டிடங்கள் தற்போது மது அருந்தும் குடிமகன்களின் கூடாரமாக திகழ்கிறது. மேலும், இங்கு சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடக்கிறது. இங்குள்ள கட்டிடங்களில் மது அருந்திவிட்டு காலி பாட்டிகளை சாலையில் உடைத்து எறிந்துவிட்டு குடிமகன்கள் செல்லுகின்றனர்.

இந்த பாட்டில்கள் தெருக்களில் நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்துகின்றன.

பாழடைந்த கட்டிடங்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது. இதனால் இப்பகுதியில் பகல்-இரவு நேரங்களில் மக்கள் நடமாட முடியவில்லை.

இவைகள் இரவு நேரங்களில் குடியிருப்புகளில் படையெடுத்து வருகின்றன. இதனால் பலர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை இங்கு பஸ் நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது.

பஸ் நிலையம், தபால் நிலையம், நூலகம், வங்கி அமைக்க நிலங்களும் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவைகளும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒப்படைக் கப்படாமலேயே உள்ளது.

இதனால் 3 கி. மீட்டர் தூரம் சென்று தான் மக்கள் பயன்படுத்திட வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், இங்குள்ள குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி வருகிறார்கள். இது குறித்து அரசு துறைகளின் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Tags:    

Similar News