உள்ளூர் செய்திகள்

நெகமத்தில் கிராமங்கள் தோறும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும்

Published On 2022-06-19 09:21 GMT   |   Update On 2022-06-19 09:21 GMT
  • கொள்ளை, வழிப்பறி திருட்டு சம்பவங்களை தடுக்கவும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • கிராம பகுதிகளில் ஒவ்வொரு தெருவிற்கும் நுழைவு வாயில் முன்பு கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும்.

நெகமம்:

நெகமம் பகுதியில் கொள்ளை, வழிப்பறி திருட்டு சம்பவங்களை தடுக்கவும், ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அடிக்கடி வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிபவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குற்றச்சம்பவங்களை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காண்காணித்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது நெகமத்தில் நான்கு ரோடு சந்திப்பு, வடசித்தூர், நெகமம் போலீஸ் நிலையம் உள்பட 15- க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

மேலும் காட்டம்பட்டி பிரிவு அருகே நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.இந்த கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

திருப்பூர்- பொள்ளாச்சி மெயின் ரோடு, உடுமலை - திருப்பூர் ரோட்டில் நாளுக்கு நாள் அதிகளவில் வாகனங்கள் சென்று வருவதால் இந்த மெயின் ரோட்டில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் இரு சக்கர வாகனத்தில் 3 பேர், 4 பேர் பயணம் செய்வது போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நெகமம் போலீசார் ஒருவர் கூறியதாவது:-காவல் துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் நெகமம் மற்றும் வடசித்தூர் பகுதியில் 15- க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

மேலும் கூடுதலாக ஆண்டிபாளையம், செட்டியக்காபாளையம், செங்குட்டைப்பாளையம், பனப்பட்டி, மெட்டுவாவி, கக்கடவு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கிராம பகுதிகளில் ஒவ்வொரு தெருவிற்கும் நுழைவு வாயில் முன்பு கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும். இதை அப்பகுதி மக்கள் முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யும் போது கிராமங்களில் திருட்டு சம்பவங்கள், தடுக்க ஏதுவாக இருக்கும். இதை கிராம பகுதி மக்கள் விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News