ஏற்காட்டில் பனிப்பொழிவு- குளிரால் பொதுமக்கள் கடும் அவதி
- மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
- விடுமுறை முடிந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ஏற்காடு வெறிச்சோடியது.
ஏற்காடு:
சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை பகுதி முழுவதும் பச்சைபசேலேன காட்சி அளிக்கிறது. இது தவிர சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையாக மாறியது.
இந்த நிலையில் கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அப்போது பெய்த திடீர் மழை மற்றும் பனிப்பொழிவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் விடுமுறை முடிந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி ஏற்காடு வெறிச்சோடியது. இதே போல் கடந்த சில நாட்களாக மழையும் இல்லை. இந்த நிலையில் ஏற்காட்டில் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 11 மணி வரை பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது.
இதன் காரணமாக மாலை 4 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் ஏற்காடு நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. பனிப்பொழிவுடன் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.