கடலூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் இறந்த மாணவி சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
- கடலூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் இறந்த மாணவி சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலலில் ஈடுபட்டனர்.
- இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறினர் .
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன்.இவரது மகள் பிரவீனா (வயது 18). இவர் கடலூர் அருகே எஸ்.குமராபுரம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று காலை கல்லூரி மாணவி பிரவீனா விடுதியில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்தார் . தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த கல்லூரி மாணவியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மாலை இறந்த மாணவியின் பெற்றோர்கள் , உறவினர்கள் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தடா.தட்சணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். .அப்போது அவர்கள் கூறுகையில் , கல்லூரி மாணவி இறந்ததில் மர்மம் உள்ளது . ஆகையால் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர் . அப்போது போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர் . இதன் காரணமாக கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.