உள்ளூர் செய்திகள்

வகுப்பறையில் மாணவனை பாம்பு கடித்தது

Published On 2023-09-14 03:34 GMT   |   Update On 2023-09-14 03:34 GMT
  • வழக்கம்போல பள்ளிக்கு சென்ற அவன், வகுப்பறையில் உட்கார்ந்திருந்தபோது மேஜையின் உள்பகுதியில் தற்செயலாக புத்தகத்தை எடுப்பதற்காக கையை விட்டுள்ளான்.
  • மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாம்பை லாவகமாக பிடித்து ஒரு குளிர்பான பாட்டிலில் போட்டு அடைத்தனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் களிமண்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. கூலித்தொழிலாளி. இவருடைய மகன் முனீஸ்பாலா (வயது 13). அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று முன்தினம் மாணவன் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற அவன், வகுப்பறையில் உட்கார்ந்திருந்தபோது மேஜையின் உள்பகுதியில் தற்செயலாக புத்தகத்தை எடுப்பதற்காக கையை விட்டுள்ளான். அப்போது வெடுக்கென்று ஏதோ ஒன்று கடித்ததை உணர்ந்த முனீஸ்பாலா, உடனடியாக கையை உதறிக்கொண்டு வெளியில் எடுத்துள்ளான். உள்ளே பார்த்தபோது பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

அதனை கண்டு அலறவே மாணவர்கள் ஒன்று சேர்ந்து அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு குளிர்பான பாட்டிலில் போட்டு அடைத்தனர். உடனடியாக மாணவன் முனீஸ்பாலா ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். பாட்டிலில் அடைக்கப்பட்ட பாம்பும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

அது ஒரு வகையான விஷப்பாம்பு என்பதை அறிந்த டாக்டர்கள், மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News