சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை
- இந்த ஆண்டு முக்கோடி தெப்பத்திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 8-ம் நாள் விழாவான வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பு விழா.
சுவாமிமலை, டிச.30-
108 திவ்ய தேசங்களில் 20-வது தலமாக விளங்குவது நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை பங்குனி பெருவிழா மற்றும் முக்கோடி தெப்ப திருவிழாவின் போது கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு முக்கோடி தெப்பத்திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் பெருமாள்- தாயார் வீதியுலா நடைபெறும். 4-ம் நாள் விழாவான நேற்று கல்கருடசேவை நடந்தது.
மாலை கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, இரவு கருடபகவான் மீது பெருமாளும், அன்னபட்சி வாகனத்தில் தாயாரும் சன்னதிக்குள் சென்றனர்.
இதையடுத்து 8-ம் நாள் விழாவான வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பும், ஜன.3-ம் தேதி தெப்பத்திருவிழாவும், ஜன.5-ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.