உள்ளூர் செய்திகள்

ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று நள்ளிரவு சிறப்பு அபிஷேகம்

Published On 2023-01-05 07:14 GMT   |   Update On 2023-01-05 07:14 GMT
  • சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய 4 கால சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
  • இந்த கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடந்தது.

சேலம்:

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய 4 கால சிறப்பு அபிஷேகம் நடக்கும்.

இந்த கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடந்தது. அந்த ஆண்டு கும்பாபிஷேக விழாவிற்காக பாலாலயம் செய்யப்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படவில்லை. கடந்த செப்டம்பரில் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட உள்ளது.

இதை ஒட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடராஜருக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், பழங்கள் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இந்த சிறப்பு அபிஷேகம் நாளை காலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதன் தொடர்ச்சியாக சுகவனேஸ்வரருக்கு தங்க நாகாபரணம், அம்மனுக்கு தங்க கவசம் சாத்துபடி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்கிறார்கள்.

இதேபோல் அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகிரி சுப்பிரமணி சுவாமி கோவில், உத்தமசோழபுரம் கராபுரநாதர் கோவில், வேலூர் தான்தோன்றி ஈஸ்வரன் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், சிவன் கோவில் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களின் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News