மக்கள் பணிகளால் நம் மனங்களில் வாழ்கிறார் பா.சிவந்தி ஆதித்தனார்- அன்புமணி ராமதாஸ் புகழாரம்
- தமிழ் இதழியல் வரலாற்றில் தந்தை சி.பா. ஆதித்தனாரைப் போலவே சிவந்தி ஆதித்தனாரும் தவிர்க்க முடியாதவர்.
- பா. சிவந்தி ஆதித்தனார் செய்த மக்கள் பணிகளால் அவர் நமது மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பத்தாவது நினைவு நாளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ் இதழியல் வரலாற்றில் தந்தை சி.பா. ஆதித்தனாரைப் போலவே சிவந்தி ஆதித்தனாரும் தவிர்க்க முடியாதவர். இதழியல் துறை அவர் தொட்டதெல்லாம் துலங்கின. அவரது அனைத்து புதிய முயற்சிகளும் வென்றன. அதற்குக் காரணம் அவர் மக்கள் மனங்களை நன்கு அறிந்திருந்தது தான்.
கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் ஆகிய துறைகளில் அவர் செய்த சாதனைகளும், அவர் அளித்த கொடைகளும் அவரது பெருமையை என்றென்றும் பேசும். பா. சிவந்தி ஆதித்தனார் செய்த மக்கள் பணிகளால் அவர் நமது மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது பெருமைகளை இந்த நாளில் நாம் போற்றுவோம். அவரது புகழ் மேலும் பரவட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.