உள்ளூர் செய்திகள்

சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்

Published On 2023-12-04 09:47 GMT   |   Update On 2023-12-04 09:47 GMT
  • பொருளாதாரத்துறை ஆசிரியர் கண்டிப்புடன் இருப்பார் எனத் தகவல்.
  • கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். அம்மா, அப்பாவிற்கு பிறகு குருவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என குழந்தைகளை சொல்லி வளர்ப்பார்கள். 20-ம் நூற்றாண்டு வரை இது கடைபிடிக்கப்பட்டது எனலாம். 2000-த்திற்கு முன்பு வரை ஆசிரியருக்கு மிகுந்த மரியாதை கொடுக்கப்பட்டு வந்தது.

சரியாக படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பார்கள். பிரம்பு அடி, வெயிலில் நிற்க வைப்பது. முழங்கால் போட வைப்பது, பெஞ்ச் மீது நிற்க வைப்பது, தோப்புக்கரணம் போட வைப்பது என தண்டனை வழங்குவார்கள். இது எல்லாம் தங்களை திருத்துவதற்குதான் என மாணவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

தற்போது அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்துள்ளது. ஆசிரியர் அடித்தால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சில மாணவர்கள் ஆசிரியரை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

பொருளாதாரத் துறை ஆசிரியர் கடற்கரை (வயது 12). இவர் திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொருளாதார துறை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 11-ம் வகுப்பு மாணவர்கள் இருவரை படிக்கும்படி கண்டித்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இருவரும் ஆசியரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுவதி பெற்றுள்ளார். இந்த நிலையில் தப்பி ஓடிய மாணவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News